தமிழக செய்திகள்

தமிழக கவர்னர் உரையில் கனிமவள கொள்ளை தடுத்தல் அறிவிப்பு: அன்புமணி வரவேற்பு

தமிழ்நாட்டில் உள்ள 5 லட்சம் அரசு காலிப் பணியிடங்களை நிரப்புவது குறித்து தமிழக கவர்னர் உரையில் எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு சட்டப்பேரவையில் உரையாற்றிய கவர்னர் அர்லேகர், தொழில் தொடங்குவதற்கான சூழலை எளிதாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்திருக்கிறார். தொழில் முதலீட்டை ஊக்குவிப்பதற்காக தொழில் முதலீட்டாளர் ஊக்குவிப்பு ஆணையம் அமைக்கப்படும் என்று கவர்னர் உரையில் கூறப்பட்டுள்ளது. இது பாட்டாளி மக்கள் கட்சியால் பத்தாண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தப்பட்டு வரும் யோசனையாகும். இதற்கு செயல்வடிவம் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கதாகும்.

கனிமவள கொள்ளையை தடுக்க நடவடிக்கை:

தமிழ்நாட்டின் பெரும் பேரழிவாகத் தொடர்வது கனிமவள கொள்ளை தான். இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்; இதன் மூலம் தனியாருக்கு சென்ற வருவாய் அரசுக்கு திருப்பப்படும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. அதேபோல், அரசு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஆகியவற்றில் காலியாக கிடக்கும் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்கத்தக்கதே.

காலிப்பணியிடங்கள் நிரப்புவது குறித்த அறிவிப்பு இல்லை:

அதே நேரத்தில், தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களும் நிரப்பப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. தமிழ்நாட்டில் குறைந்தது 5 லட்சம் அரசுப் பணிகள் காலியாக இருக்கும் நிலையில், அவற்றை நிரப்புவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது. நிதிப்பற்றாக்குறை இருந்தாலும், அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவை எப்போது, எப்படி நிறைவேற்றப்படும் என குறிப்பிடப்படவில்லை.

கவர்னர் உரையில் பெரும்பான்மையான அறிவிப்புகள் மேலோட்டமாகவே உள்ளன. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போதாவது தமிழ்நாட்டு மக்களும், இளைஞர்களும் எதிர்பார்க்கும் அறிவிப்புகளை முதல்-அமைச்சர் விஜய் வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.