தமிழக செய்திகள்

மீனாட்சி அம்மன் கோவில் நில மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது

புதுக்கோட்டையை சேர்ந்த ராஜ்குமார் போலி ஆவணங்கள் மூலம் பட்டா பெற்றது தெரியவந்தது.

மதுரை,

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், அழகர்கோவிலுக்கு சேவை செய்வ தற்காக உருவாக்கப்பட்ட ரூ.60 கோடி மதிப்பிலான நிலத்தை முறைகேடாக பட்டா மாற்றம் செய்து பத்திரப்பதிவு செய்ததாக மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

கைது

விசாரணையில் புதுக்கோட்டையை சேர்ந்த ராஜ்குமார் போலி ஆவணங்கள் மூலம் பட்டா பெற்றது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் போலீசார் விசாரணையில் 2016-ம் ஆண்டு மதுரை வடக்கு முன்னாள் தாசில்தார் அன்பழகன், அந்த சொத்தின் மீதான கோவில் பெயரை நீக்கி ராமாயி ஆயியார் உள்ளிட்ட 9 பேரின் பெயரில் சட்டவிரோதமாக பட்டா மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே அன்பழகன் பதவி உயர்வு பெற்று ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் துணை கலெக்டராக நில எடுப்பு பிரிவில் கலெக்டரின் நேர்முக உதவியாளராக பணியாற்றினார். அவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி கடந்த 4-ந் தேதி கைது செய்தனர்.

விசாரணை

இந்த வழக்கில் தொடர்புடைய திண்டுக்கல் சிறுமலையை சேர்ந்த காளிக்குமார் உள்பட 3 பேர் மோசடியாக கூட்டுச்சதியில் ஈடுபட்டு வட மதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் நில அடமான பத்திரம் பதிவு செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி காளிக்குமாரை நேற்று கைது செய்தனர்.