தமிழக செய்திகள்

ஊட்டியில் தாயை பிரிந்து தவித்த மற்றொரு புலி குட்டி மீட்பு

தற்போது இரண்டு புலி குட்டிகளையும் முதுமலை முகாமில் வைத்து கால்நடை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

நீலகிரி,

நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் அதையொட்டி உள்ள மசினகுடி, கூடலூர் மற்றும் நீலகிரி வனக்கோட்டங்கள், முக்குருத்தி தேசிய பூங்கா ஆகியவை புலிகளின் முக்கிய வாழ்விடங்களாக உள்ளன. இந்த இடங்களில் புலிகள் வாழ்வதற்கான சூழல் உள்ளதாலும், வனத்துறை மூலம் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மூலமாகவும் கடந்த சில ஆண்டுகளாக புலிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கடந்த 7 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது. அதாவது 2018-ம் ஆண்டு 34 புலிகள் இருந்த நிலையில், 2024-ம் ஆண்டு 63 ஆக அதிகரித்தது. இதற்கிடையே கடந்த 2023-ம் ஆண்டு 6 குட்டிகள் உட்பட 10 புலிகள் பல்வேறு பகுதிகளில் இறந்தன. இதைத்தொடர்ந்து புலிகளை பாதுகாக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நீலகிரி வனக்கோட்டம் ஊட்டி வடக்கு வனச்சரகத்துக்கு உட்பட்ட ஆரம்பி பிரிவு அருகில் உள்ள அழகர்மலை பகுதியில் உள்ள தோட்டத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு 2 புலி குட்டிகள் தாயை பிரிந்து தவித்தவாறு சுற்றித்திரிவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

நேற்று அந்த பகுதியில் சுற்றித்திரிந்த, பிறந்து 5 மாதங்களே ஆன பெண் புலி குட்டியை வனத்துறையினர் மீட்டனர். மற்றொரு புலி குட்டியை தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று சோலாடா கிராமத்தில் மற்றொரு புலி குட்டியை பத்திரமாக வனத்துறையினர் பிடித்தனர். தற்போது இரண்டு குட்டிகளையும் முதுமலை முகாமில் வைத்து கால்நடை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

மேலும், தாய்ப்புலி வேறு பகுதிகளில் சுற்றி வருகிறதா? அல்லது இறந்துவிட்டதா? என்றும் வனத்துறையினர் தீவிரமாக வனப்பகுதியில் தேடி வருகின்றனர்.