தமிழக செய்திகள்

அந்தியூர்: சிறுமியை திருமணம் செய்த சிறுவன் கைது

சிறுமியின் பெற்றோர் பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

பவானி,

அந்தியூர் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. அதேபோல் பவானி அருகே உள்ள அத்தாணி பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுவன். இவரும், சிறுமியும் உறவினர்கள் ஆவர். இதனால் 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் சிறுவனுடனான காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் காதலை கைவிடுமாறு கூறி வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி சிறுவனும், சிறுமியும் வீட்டை விட்டு வெளியேறி அத்தாணி பகுதியில் உள்ள கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டார். பின்னர் சிறுமியை அவர் தன்னுடைய வீட்டுக்கு அழைத்து சென்றார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி விசாரணை நடத்தி சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்ததாக வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தார்.