தமிழக செய்திகள்

தூத்துக்குடி மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை; ரூ.7.49 லட்சம் பறிமுதல்

கணக்கில் வராத ரூ.7 லட்சத்து 49 ஆயிரத்து 900 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் இன்று நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் வராத ரூ.7 லட்சத்து 49 ஆயிரத்து 900 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதிரடி சோதனை

லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி பீட்டர் பால்துரை தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் இன்று மதியம் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தின் பொறியியல் பிரிவில் திடீர் சோதனை மேற்கொண்டனர். சோதனையின்போது, மாநகராட்சி கண்காணிப்புப் பொறியாளர் திலகம் மற்றும் உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் கண்ணா ஆகியோரின் அலுவலக அறைகளில் தீவிரமாக ஆய்வு நடத்தப்பட்டது.

பல மணி நேரம் நீடித்த சோதனையின் முடிவில், உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்ததாகக் கூறப்படும் ரூ.7,49,900 ரொக்கப் பணத்தை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், விசாரணைக்குத் தேவையான சில ஆவணங்களையும் கைப்பற்றியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சி வரலாற்றில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்துவது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது. இதனால் மாநகராட்சி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக கண்காணிப்புப் பொறியாளர் திலகம் மற்றும் உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் கண்ணா ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.