சென்னை,
தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ரூ.1,020 கோடி டெண்டர் முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடு மற்றும் அவர் தொடர்புடைய 30 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் டெண்டர்களில் நடைபெற்ற முறைகேடு தொடர்பான 241 ஆவணங்கள், மின்னணு சாட்சியங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், வழக்கின் புலனாய்வு தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில், கைப்பற்றப்பட்ட ஆவணங்களை தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும், அதனடிப்படையில் கே.என்.நேரு, அவரது சகோதரர் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பி விரைவில் விசாரணை நடத்தப்படும் என்று லஞ்ச ஒழிப்பு போலீஸ் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கிடையில் கே.என்.நேரு தன் மீதான இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.