தமிழக செய்திகள்

'பரந்தூர் மக்களை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம்' - அமைச்சர் தங்கம் தென்னரசு

பரந்தூர் மக்களை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

விருதுநகர்,

காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் ஏகனாபுரம் பகுதியில் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் முடிவு செய்த நிலையில் அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 900 நாட்களுக்கும் மேலாக ஏகானாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களின் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வரும் சூழலில், தமிழக வெற்றில் கழகம் கட்சியின் தலைவர் விஜய், தனது கட்சியின் முதல் மாநாட்டில் பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, விவசாய நிலங்களை கையகப்படுத்த கூடாது என தீர்மானமும் நிறைவேற்றியிருந்தார்.

தொடர்ந்து பரந்தூர் மக்களை சந்திக்கவும் விஜய் திட்டமிட்டார். இதற்காக காஞ்சிபுரம் மாவட்ட போலீசாரிடம் அனுமதி கோரப்பட்டது. நாளை மதியம் 1 மணியளவில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், பரந்தூர் மக்களை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "விஜய் மட்டுமல்ல, யார் வேண்டுமானாலும் பரந்தூர் மக்களை சந்திக்கலாம். அரசியல் கட்சி தலைவர்கள் பரந்தூர் மக்களை சந்திக்கும்போது அவர்களின் கோரிக்கைகளை கேட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தால் அரசு அதனை பரிசீலனை செய்யும்" என்று தெரிவித்தார்.