தமிழக செய்திகள்

சென்னை, கோவையில் செல்லப்பிராணிகள் பூங்கா அமைக்க 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

பாதுகாப்பான செல்லப்பிராணி வளர்ப்பு, மனதாபிமானத்துடன் பிராணிகளை நடத்துதல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சென்னை, கோவையில் செல்லப்பிராணிகள் பூங்கா அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு விலங்குகள் நலவாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

பாதுகாப்பான செல்லப்பிராணி வளர்ப்பு மனதாபிமானத்துடன் பிராணிகளை நடத்துதல் ஆகியன குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஏதுவாக சென்னை மற்றும் கோயம்புத்தூரில் தனியார் பங்களிப்புடன் செல்லப்பிராணிகள் பூங்கா அமைத்து பராமரித்திட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே இது தொடர்பாக முன்அனுபவம் உள்ள தனியார் தொண்டு நிறுவனங்கள் (NGO’s) மற்றும் விலங்குகள் நல அமைப்புகளில் இருந்து ஒன்றினை தேர்வு செய்து, அவற்றிற்கு கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் நிலம் ஒதுக்கீடு செய்து தரப்படும்.

அந்த இடத்தில் செல்லப்பிராணிகளுக்கு தேவையான விளையாட்டு சாதனங்கள், பச்சை புல்வெளிகள், உணவுப் பொருட்கள் சார்ந்த கடைகள், பயிற்சிக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் விதிமுறைகள் அடங்கிய கையேடுகளை அந்த நிறுவனத்தின் சுயநிதியினைக் கொண்டு உருவாக்கி, அதனை பராமரித்திடவும், இதன்மூலம் கிடைக்கப்பெறும் வருவாயினை அரசுடன் பகிர்ந்து கொள்ள ஒப்புக்கொள்ளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பப் படிவம் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை கீழ்கண்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்: Website: www.tnawb.tn.gov.in பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள விலாசத்திற்கு 26.2.2026 தேதிக்குள் அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.