தமிழக செய்திகள்

220 கோவில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம்; விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும் 28.08.2026 அன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 220 திருக்கோவில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் நியமனத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

அறங்காவலர்கள் நியமனம்

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள சட்டப்பிரிவு 46(iii)-ன்கீழ் உள்ள 220 திருக்கோவில்களுக்கு பரம்பரை முறைவழிசாரா அறங்காவலர்கள் நியமனம் செய்வதற்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, கடந்த 14.06.2026 அன்று தமிழ் மற்றும் ஆங்கில முன்னனி நாளிதழ்களிலும், இத்துறையின் வலைதளத்திலும் விளம்பரம் செய்யப்பட்டது. இவ்விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் 22.07.2026 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திருக்கோவில்களின் நலனைக் கருத்தில் கொண்டு, முதற்கட்டமாக 12.08.2026 மாலை 5.45 மணி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டது.

கால அவகாசம் நீட்டிப்பு

விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான இறுதிநாள் இன்றுடன் நிறைவடையும் நிலையில், பக்தர்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, அதிகப்படியான தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க ஏதுவாக, விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும் 28.08.2026 அன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

28ம் தேதி வரை அவகாசம்

எனவே, இதுவரை விண்ணப்பிக்காத தகுதியுடைய விருப்பமுள்ள பக்தர்கள், நிர்ணயிக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, 28.08.2026 அன்று மாலை 5.45 மணிவரை இணையத்தளம் வாயிலாக பதிவேற்றம் செய்து / நேரில் / அஞ்சல் மூலமாக அந்தந்த திருக்கோவில் அமைந்துள்ள மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.