நயினார் நாகேந்திரன்  
தமிழக செய்திகள்

அரசுப்பள்ளி மாணவர்கள் என்ன உங்கள் அடிமைகளா ? விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

குழந்தைகளை பணியாட்கள் போல பயன்படுத்துவதை பாஜக ஒருபோதும் அனுமதிக்காது என்று நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

காஞ்சிபுரம் அருகே ஜேஜே நகர் பகுதியில் உள்ள அரசு ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் வகுப்புகளைப் புறக்கணித்து விட்டு, மாணவர்களை பள்ளி சீருடையிலேயே உங்கள் பிறந்தநாள் விழாவிற்கு அழைத்துச் செல்லும் தைரியமும் துணிச்சலும் தவெக நிர்வாகிகளுக்கு எப்படி வந்தது? முதல்வர் பிறந்தநாள் என்று கூறிக் கொண்டு அரசுப்பள்ளி மாணவர்களை தவெக கட்சிக் கொடிகள் கட்ட வைப்பது, அரசுப் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து மாணவர்களை உங்களுக்கு “ஹாப்பி பார்த்டே” பாட வைப்பது, அரசு துவக்கப்பள்ளி மாணவர்களை “விஜய் வாழ்க” என கோஷமிட வைப்பது என படிக்கும் பிள்ளைகளை பணியாட்கள் போல நடத்துவதற்கு உங்கள் கட்சியினருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? எங்கள் வீட்டுப் பிள்ளைகளை வலுக்கட்டாயமாக உங்கள் பிறந்தநாளைக் கொண்டாட வைக்குமளவிற்கு நீங்கள் என்ன சுதந்திரப் போராட்டத் தியாகியா?

கடந்த தேர்தலின் போது சட்டத்திற்கு புறம்பாக சிறுவயது குழந்தைகளை பகடைக்காய்களாகப் பயன்படுத்தி அரியணையில் அமர்ந்த நீங்கள், தற்போது அதே குழந்தைகளை பணியாட்கள் போல பயன்படுத்துவதை பாஜக ஒருபோதும் அனுமதிக்காது! எனவே, அரசுப்பள்ளி மாணவர்களை உங்கள் பிறந்தநாள் விழாவிற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றவர்கள் மீது நீங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்! இனியும் இதுபோன்ற அராஜகங்களில் ஈடுபடக் கூடாது என்பதை உங்கள் கட்சியினருக்கு புரியும் மொழியில் நீங்கள் வலியுறுத்த வேண்டும்!”என்று பதிவிட்டுள்ளார்.