தமிழக செய்திகள்

அதலபாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறதா அரசுப் பள்ளிகள்? - நயினார் நாகேந்திரன் கேள்வி

அதிகளவிலான மாணவர் சேர்க்கைகள் நடப்பதையும் உறுதி செய்ய வேண்டுமென நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

அதலபாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறதா அரசுப் பள்ளிகள்? விளக்கம் வேண்டும் அமைச்சர் ராஜ்மோகனே? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

மாணவர் சேர்க்கை குறைவு

கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு (UDISE+) அறிக்கையின் படி, தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைகள் லட்சக்கணக்கில் குறைந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன. அதுமட்டுமன்றி, கடந்த சில தினங்களாகவே, மதுரை, திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மாணவர் சேர்க்கை இல்லாத காரணத்தினால், பல தொடக்கப்பள்ளிகள் மூடப்படுவதாக தொடர்ந்து வெளியாகி வரும் செய்திகள் மிகுந்த வருத்தமளிக்கின்றன.

அரசு தொடக்கப்பள்ளிகளில் சரிந்த மாணவர் சேர்க்கைகள் தான் ஒட்டுமொத்த தமிழக அரசுப் பள்ளிகளின் மாணவர் விகிதத்தையும் பாதித்திருக்கிறது என்பது தற்போது வெட்ட வெளிச்சமாகத் தெரிகையில், நீங்கள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு அரசு அங்கன்வாடி மையங்கள் மற்றும் தொடக்கப்பள்ளிகளில் இதுவரை எத்தனை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன, அவற்றின் தரத்தை மேம்படுத்த என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது குறித்த விரிவான அறிக்கையை ஆதாரங்களுடன் மக்களுக்கு நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். கடந்த திமுக ஆட்சியைப் போலவே, தற்போதைய தவெக அரசும் அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தில் சமரசம் செய்யக் கூடாது என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பு.

வலியுறுத்தல்

அதுமட்டுமன்றி, குறைந்த மாணவர் சேர்க்கையினால் அரசுப் பள்ளிகள் மூடப்படும் பட்சத்தில், ஏழை எளிய பெற்றோர்கள் தனியார் பள்ளிகளையே நாட வேண்டியுள்ளது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் சொல்லப்படாத நிதிச்சுமையில் தள்ளப்படுகின்றன என்பதை முதல்-அமைச்சர் விஜய்க்கும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரான நீங்களும் உணர்ந்து, அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்து தரமான கல்வி கிடைப்பதையும், அதிகளவிலான மாணவர் சேர்க்கைகள் நடப்பதையும் உறுதி செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.