தமிழக செய்திகள்

திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரண்ட்

பொன்முடியை செப்டம்பர் 2ஆம் தேதிக்குள் கைது செய்து ஆஜர்படுத்த காவல் துறைக்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சைவ, வைணவ சமயங்கள், பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசிய வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சை பேச்சு

சென்னையில் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவ, வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

இதுசம்பந்தமாக சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்தன், சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், வெறுப்பு பேச்சு பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான இந்த புகாரை விசாரித்து, மதரீதியாக வெறுப்புணர்வை ஏற்படுத்துதல், மத உணர்வுகளை புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவரை தண்டிக்க வேண்டும் என கோரப்பட்டது.

இந்த புகார் மனு, எம்.பி - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றமான ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு மாற்றபட்டு நிலுவையில் உள்ளது.

வழக்கு தள்ளுபடி

தனக்கு எதிரான புகாரை விசாரணைக்கு ஏற்று ஜார்ஜ்டவுன் நீதிமன்றம் அனுப்பிய சம்மன் மற்றும் வழக்கை ரத்து செய்யக் கோரி பொன்முடி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் , திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் வழக்கை ஆறு மாதத்தில் முடிக்க உத்தரவிட்டார்.

இந்த வழக்கு இன்று சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதரார் உமா ஆனந்த தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை சென்னை ஐகோர்ட்டு நீக்கி இருப்பதாகவும் ஆறு மாதத்தில் விசாரணை முடிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டதாகவும் தெரிவித்தார்.

பொன்முடிக்கு பிடிவாரண்ட்

பொன்முடி தரப்பில் ஆஜராக இருந்த வழக்கறிஞர் வழக்கில் இன்று ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது ஆனால் வழக்கில் இன்று ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரி பொன்முடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரிப்பதாக உத்தரவிட்ட நீதிபதி

சைவ, வைணவ சமயங்கள், பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசிய வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படுகிறது. பொன்முடியை செப்டம்பர் 2ஆம் தேதிக்குள் கைது செய்து ஆஜர்படுத்த காவல் துறைக்கு சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டு உத்தரவிடுகிறது என கூறி வழக்கு விசாரணையை செப்டம்பர் 2 தேதிக்கு தள்ளிவைத்தார்.