சென்னை,
டி.வி.எம். சேவா பாலம் தொண்டு நிறுவனத்தின் 29 ஆம் ஆண்டு கல்வி விருதுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சேவா பாலம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் எம்.இருளப்பன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் கலந்து கொண்டு பல்வேறு தேர்வுகளில் சிறப்பிடங்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.மேலும் சிறந்த மருத்துவர், சிறந்த பள்ளி முதல்வர், சிறந்த சமூக சேவகர் உள்ளிட்ட பலருக்கும், நலிவடைந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் நீதிபதி வழங்கினார். அப்போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேசியதாவது;-
“தமிழ் மொழி, தமிழர் நாகரிகம் என்பது உலகெங்கிலும் காணக் கிடைக்காத தொன்மையான பொக்கிஷங்களை உள்ளடக்கியது என்பதில் பெருமை கொள்ளலாம். நான் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் தமிழ் இலக்கியத்தில் இருந்து சில முக்கிய அம்சங்களை தெரிவிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். தியாகமும், நற்பண்புகளும் நிறைந்த சேவை மனப்பான்மை கொண்ட மனிதர்களே மிக அழகானவர்கள் என்று அவ்வையார் தெரிவித்துள்ளார்.
வள்ளுவர் ஒப்புரவு, ஈகை ஆகிய அதிகாரங்களில் சமுதாயத்தில் நலிவடைந்தவர்களின் சேவைகளை பூர்த்தி செய்வது, ஒவ்வொரு மனிதனும் தன்னால் இயன்ற உதவிகளை மற்றவர்களுக்கு செய்வதற்கான ஈகை குண நலன்கள் குறித்தும் தெளிவாக தெரிவித்துள்ளார். கல்லால் கட்டப்பட்ட கோவில்களில் காணிக்கை செலுத்துவதற்கு முன்பாக நடமாடும் கோவில்களாக விளங்கும் நலிவடைந்தவர்களுக்கு ஈதல் வேண்டும் என்பதை திருமூலர் விளக்கமாகவே கூறியுள்ளார்.
அதிக மதிப்பெண், உயர்ந்த பதவி, அளவற்ற செல்வங்களை பெறுவதுதான் உண்மையான வெற்றி என போற்றுகிறோம். ஆனால் வாழ்வில் நாம் செய்யும் சேவைகளின் மூலம் பெறப்படும் மன நிறைவுதான் வாழ்க்கையில் உண்மையான வெற்றியை நிர்ணயிக்கும் என்பதை குழந்தைகளுக்கு தொடர்ந்து வலியுறுத்தி போதிக்க வேண்டும்.
இன்று நமது தலைமுறையினர் அனைவரும் அலைபேசியில் மூழ்கி கிடக்கின்றனர். ஒரு நிமிடம் கூட அலைபேசி இல்லாமல் இருக்க இயலாது நிலை ஏற்பட்டுவிட்டது. செயற்கை நுண்ணறிவு அனைத்து துறைகளிலும் உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது. இருப்பினும் செயற்கை நுண்ணறிவுக்கு ஆன்மா ஒன்று கிடையாது. செயற்கை நுண்ணறிவு மூலம் சேவைகளை செய்திட இயலாது என்பதுதான் எதார்த்த உண்மை. எனவே சமூக சேவை ஆற்றுபவர்கள் தான் மக்கள் மனதில் என்றும் நிலைத்திருப்பார்கள்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.