தமிழக செய்திகள்

மேகமலை காப்பகத்தில் செயற்கை நீர்நிலைகள்: வனத்துறை முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டு

மேகமலை புலிகள் காப்பகத்தில் வனத்துறை சார்பில் சூரிய சக்தியால் இயங்கும் செயற்கை நீர்நிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், வனவிலங்குகளின் தாகத்தைத் தீர்க்க வனத்துறை மேற்கொண்டுள்ள சூரியசக்தி நீர்நிலைத் திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நிலவும் கடும் வறட்சி காரணமாக, இயற்கையான நீர்நிலைகள் வற்றி வருகின்றன. இதைக் கருத்தில் கொண்டு, மேகமலை புலிகள் காப்பகத்தில் வனத்துறை சார்பில் சூரிய சக்தியால் இயங்கும் செயற்கை நீர்நிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி காணப்படுவதால், வனப்பகுதியில் இருந்து யானைகள் கூட்டமாக வந்து தாகம் தணித்துச் செல்கின்றன. இப்பகுதியில் பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்தாலும், தற்போது இந்த நீர்நிலைகளை அதிகளவில் பயன்படுத்துவது யானைகளே ஆகும்.

வனத்துறையின் இந்தச் சிறப்பான முயற்சியை வனவிலங்கு ஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், “கோடை காலத்தில் வனவிலங்குகள் தண்ணீருக்காக அலைவதைத் தடுக்க இந்தத் திட்டம் ஒரு சிறந்த தீர்வாகும். இதே போன்ற சூரியசக்தி நீர்நிலைத் திட்டத்தை மற்ற காப்பகங்கள் மற்றும் சரணாலயங்களிலும் விரிவுபடுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.