ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே உள்ள தென்னம்பிள்ளை வலசை பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 33). டிரைவர். இவரது மனைவி சிவபாலா (32). ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை உள்ளனர்.
இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த கணவன், மனைவி இருவரும் விவாகரத்து கேட்டு ராமநாதபுரம் குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு விசாரணைக்காக சிவபாலா நேற்று காலை கோர்ட்டுக்கு வந்தார். சரவணன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் அடுத்த மாதம் 5-ந் தேதி வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
இதையடுத்து, சிவபாலா கோர்ட்டில் இருந்து வெளியே வந்து, தான் வேலை பார்க்கும் பள்ளிக்கூடத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் கோர்ட்டில் இருந்து வெளியே வந்ததை அப்பகுதியில் மறைந்திருந்து சரவணன் நோட்டமிட்டார்.
கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிவபாலா சென்றபோது, வேகமாக ஓடி வந்த சரவணன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சிவபாலாவை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தை கண்டு அந்த பகுதியில் இருந்தவர்கள் அலறினர். சத்தம் கேட்டு அங்கிருந்த போலீசார் ஓடி வந்தனர். இதைப் பார்த்த சரவணன் தப்பி ஓடினார். சரவணனை போலீசார் மடக்கி பிடித்து அவரை கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்திய அரிவாளும் கைப்பற்றப்பட்டது. போலீசார் சிவபாலாவின் உடலை பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பட்டப்பகலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆசிரியை, அவரது கணவராலேயே சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.