தமிழக செய்திகள்

சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு: 1,400 போலீசார் சொந்த ஊர் திரும்பினர்

தமிழக சட்டமன்ற தேர்தலில் 4 கோடியே 87 லட்சத்து 99 ஆயிரத்து 140 பேர் வாக்களித்துள்ளனர்.

சென்னை,

தமிழகம் முழுவதும் கடந்த 23-ந் தேதி, சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற்றது. மொத்த வாக்காளர் எண்ணிக்கை 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 ஆகும். அவர்களில் 2 கோடியே 80 லட்சத்து 30 ஆயிரத்து 658 பேர் ஆண்கள், 2 கோடியே 93 லட்சத்து 4 ஆயிரத்து 905 பேர் பெண்கள், 7,728 பேர் மூன்றாம் பாலினத்தவராகும்.

அவர்களில் 4 கோடியே 87 லட்சத்து 99 ஆயிரத்து 140 பேர் வாக்களித்துள்ளனர். வாக்களித்தோரின் சதவீதம் 85.10 ஆகும். இது தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாற்றில் பதிவாகியுள்ள அதிகபட்ச வாக்குப்பதிவாகும். சட்டமன்ற தேர்தலையொட்டி, 300 மத்திய கம்பெனி துணை ராணுவத்தினரும்,தமிழக போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக கோவை, ஈரோடு உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களுக்கு பணி அமர்த்தப்பட்ட மராட்டியம், கோவா மாநில போலீசார், மத்திய தொழில் பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்பு படை என மொத்தம் 1,400 போலீசார் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.