கவுகாத்தி,
126 தொகுதிகளை கொண்ட அசாம் மாநிலத்துக்கு வருகிற ஏப்ரல் 9-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மே.4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதையடுத்து, தேர்தலை எதிர்கொள்ளும் பணிகளில் அம்மாநில கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளதை முன்னிட்டு, ஏப்ரல் 9 ஆம் தேதியை பொது விடுமுறை நாளாக அசாம் அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, 1881 ஆம் ஆண்டின் 'மாற்றத்தக்க ஆவணங்கள் சட்டத்தின்' (Negotiable Instruments Act) பிரிவு 25-இன் கீழ் மாநிலத்துக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அனைத்து அரசு மற்றும் அரசு சாரா அலுவலகங்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்ட வணிக மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் அன்று மூடப்பட்டிருக்கும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் நலத் துறை வெளியிட்ட மற்றொரு அறிவிக்கையில், ” சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, வருகிற 9-ந்தேதி அனைத்து தொழிற்சாலைகள், தேயிலைத் தோட்டங்கள், கடைகள் மற்றும் பொதுப் பொழுதுபோக்கு அல்லது கேளிக்கை நிறுவனங்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.