சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பயணம் செய்து, மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அடுத்தகட்டமாக, வருகிற 21-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை 6 நாட்கள் மீண்டும் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
இது தொடர்பாக, அதிமுக தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு, தமிழகம் முழுவதும் சட்டமன்றத் தொகுதி வாரியாக புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயணம் என்ற பிரசார சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக, 21-2-2026 முதல் 26-2-2026 வரை பிரசார சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி, 21-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு ஆவடி, அம்பத்தூர் தொகுதிகளுக்கு அம்பத்தூரில் பிரசாரம் நடைபெறுகிறது. 22-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு மாதவரத்திலும், மாலை 5 மணிக்கு பொன்னேரியிலும் பிரசாரம் நடக்கிறது.
25-ந்தேதி (புதன்கிழமை) மதுரவாயல், பூந்தமல்லி தொகுதிகளுக்கு மாலை 5 மணிக்கு வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டப வளாகத்தில் பிரசாரம் நடக்கிறது. 26-ந்தேதி (வியாழக்கிழமை) தாம்பரம், பல்லாவரம் தொகுதிகளுக்கு மாலை 4.30 மணிக்கு பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் பிரசாரம் நடக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.