சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு நாளை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில 5.73 கோடி வாக்காளர்கள் இருக்கக்கூடிய நிலையில மாநிலம் முழுவதும் 75,032 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 3,022 இடங்களில் இருக்கக்கூடிய 5,938 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது.
பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினரும், அதே சமயம் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரும் பாதுகாப்பு பணியில ஈடுபடுவார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும், சுமார் 1.47 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
பாதுகாப்பு பணிக்காக 295 கம்பெனிகளை சேர்ந்த சுமார் 23,000 துணை ராணுவ படையினரும் தமிழகம் வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக சென்னையில் பாதுகாப்பு பணிக்காக 31 கம்பெனிகளைச் சேர்ந்த துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.