சென்னை,
தமிழக சட்டசபைக்கு ஒரேகட்டமாக இன்று (வியாழக்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் தங்களது பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து ஜனநாயக கடமை ஆற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை நீலாங்கரையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்ற நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரும், காரைக்குடி வேட்பாளருமான சீமான் தனது வாக்கினை பதிவு செய்தார். சீமானுடன் அவரது மனைவியும் வந்து வாக்களித்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் கூறுகையில், “ஜனநாயகக் நாட்டில் கடைசி கருவி வாக்குதான். அதனை நாம் எல்லோரும் பயன்படுத்த வேண்டும். வாக்களிக்காமல் இருப்பதும் ஜனநாயகத் துரோகம்தான். ஒவ்வொரு வாக்கிலும் மாற்றம் வரும்; எல்லோரும் வாக்களியுங்கள் என்பதை வலியுறுத்துகிறேன் என்று கூறினார்.