தமிழக செய்திகள்

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு தொடர்பாக சட்டமன்ற கட்சி தலைவர்கள், மருத்துவ நிபுணர்களுடன் இன்று ஆலோசனை

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு தொடர்பாக அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள், மருத்துவ நிபுணர்களுடன் இன்று ஆலோசனை நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை தலைமைச்செயலகத்தில் மாவட்ட கல்வி அதிகாரிகளுடனான பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் ஆலோசனைக்கூட்டம், அதைத் தொடர்ந்து கல்வியாளர்களுடனான கூட்டம் காணொலி காட்சி மூலம் நேற்று நடைபெற்றது.

பின்னர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டி வருமாறு:-

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு தொடர்பாக அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் அடங்கிய 13 பேர் கொண்ட குழுவுடன் காணொலிக் காட்சி மூலமாக 5-ந் தேதி (இன்று) பகல் 12 மணியில் இருந்து 1 மணிவரை ஆலோசனை மேற்கொள்ளப்படும். மிகக் குறுகிய காலகட்டத்தில் ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட வேண்டியதிருப்பதால் இந்த ஏற்பாட்டை செய்திருக்கிறோம்.

அதன் பிறகு பிற்பகல் 1 மணி முதல் 1.30 மணி வரைக்கும் மருத்துவ நிபுணர்கள் குழு, மனோதத்துவ நிபுணருடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும்.

அவர்களின் கருத்தின் அடிப்படையில் அறிக்கை தயாரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அளிப்போம்.

முழுமையான தகவல்

மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்டது என்பதால் நாங்கள் உடனடியாக இதில் முடிவை மேற்கொள்ளவில்லை. இந்த பிரச்சினையை முதல்-அமைச்சர் உன்னிப்பாக கவனிக்கிறார்.

இதில் அனைவரது கருத்தும் தேவை என்பதால்தான் நான் ஏற்கனவே குறிப்பிட்ட அந்த கூட்டங்களை நடத்தும்படி முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல், மற்ற மாநிலங்கள் என்ன நிலைப்பாட்டை எடுத்துள்ளன என்பது பற்றிய முழுமையான தகவலை பெறவேண்டும். இவ்வளவு நடவடிக்கைகளையும் மேற்கொண்டபிறகுதான் முதல்-அமைச்சர் இறுதி முடிவை எடுப்பார்.

மன அழுத்தம்

பிளஸ்-2 தேர்வு நடத்தாமல் போனால் உயர் கல்விக்கு மாணவர்கள் எப்படி செல்வார்கள், அங்கு எந்த மதிப்பெண்ணை காட்டுவார்கள் என்ற கேள்விகள் எழுகின்றன.

நீட் தேர்வு நடந்தால், அதில் பயிற்சி எடுத்தவர்கள் மட்டும்தான் தப்பிப்பார்களா என்பதையும் பார்க்க வேண்டியதிருக்கிறது. இப்போதைக்கு பிளஸ்-2 தேர்வை நடத்துவதா, வேண்டாமா என்பதற்கான கருத்து மட்டுமே கேட்கப்பட்டு வருகிறது.

ஆனால் மாணவர்களுக்கு எந்தவித சங்கடமும் வந்துவிடக் கூடாது. சி.பி.எஸ்.இ. தேர்வை ரத்து செய்யும் பிரதமரின் அறிவிப்பு வருவதற்கு முன்பு, தேர்வு நேரடியாக நடத்தப்படும் என்று கூறியிருந்தோம்.

ஏனென்றால், திடீரென்று தேர்வை அறிவிக்கும்போது மாணவர்களுக்கு அழுத்தம் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான்.

ஆன்லைன் வகுப்பு நெறிமுறை

நீட் தேர்வை தமிழகத்துக்குள் நுழையவிடுவதில்லை என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. சட்டமன்றம் கூடும்போது இதில் முதல்-அமைச்சர் நல்ல தீர்வை எடுப்பார். பிளஸ்-2 தேர்வு விவகாரத்தில் பெற்றோர், மாணவர்களின் கருத்துகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொருவிதமாக உள்ளன. கலவையான கருத்துகள்தான் இதுவரை பெறப்பட்டுள்ளன.

ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தயாராக உள்ளன. அதற்கான கமிட்டி போடப்பட்டுள்ளது. அதன் அறிக்கை 7-ந் தேதியன்று அளிக்கப்படுகிறது. முதல்-அமைச்சரின் ஒப்புதலுக்கு அது அனுப்பப்பட்டு, மாற்றங்கள் இருந்தால் திருத்தப்பட்டு பின்னர் வெளியிடப்படும்.

தனியார் பள்ளி ஆசிரியர்கள்

தனியார் பள்ளி ஆசிரியர்கள் சிலர் வேலை இழந்திருப்பதாக தெரிகிறது. அதுபோன்ற ஆசிரியர்களை கொரோனா தடுப்பு பணியிலாவது பயன்படுத்துங்கள் என்ற கோரிக்கை பற்றி முதல்-அமைச்சரிடம் தெரிவிப்பதாக கூறியுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்