கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

உதவிப் பேராசிரியர் நியமனத் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி

புதிய உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்படாததால் பாடம் நடத்த போதிய ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2,708 உதவிப் பேராசிரியர்களை நியமிப்பதற்காக ஆசிரியர் தேர்வு வாரியத்தால் போட்டித் தேர்வு நடத்தப்பட்டு, 6 மாதங்களாகும் நிலையில், அவற்றின் முடிவுகள் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 15-ம் தேதியான இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில், உதவிப் பேராசிரியர் நியமனங்கள் தாமதப்படுத்தப்படாமல் உடனடியாக நடத்தப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் 61 துறைகளுக்கு 2,708 உதவிப் பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஆள்தேர்வு அறிவிக்கை கடந்த ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி வெளியிடப்பட்டு, உரிய கல்வித்தகுதி கொண்டவர்களுக்கு கடந்த டிசம்பர் 27-ம் தேதி போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்தப் பணியிடங்களுக்கு 42,064 பேர் விண்ணப்பித்து, அவர்களில் பெரும்பான்மையினர் தேர்வு எழுதிய நிலையில் பிப்ரவரி மாதத்தின் முதல் பாதி வரை முடிவுகள் வெளியிடப்படவில்லை.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அலட்சியத்தைக் கண்டித்து கடந்த பிப்ரவரி 17-ம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதன்பின் அவசர, அவசரமாக செயல்பட்ட ஆசிரியர் தேர்வு வாரியம் மொத்தம் 61 துறைகளில் வரலாறு கல்வியியல், மனித உரிமைகள், இந்திய பண்பாடு மற்றும் சுற்றுலாவியல், கடல் உயிரியல், வனவிலங்கு உயிரியல் ஆகிய 5 துறைகளில் 13 உதவிப் பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான முடிவுகளை மட்டும் வெளியிட்டது. அவர்களின் கல்வித்தகுதி குறித்து பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டதால் அவர்களில் வெறும் 5 பேருக்கு மட்டும் பணி நியமன ஆணைகளை கடந்த மார்ச் 13-ம் தேதி அப்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

முடிவுகள் அறிவிக்கப்பட்ட 5 துறைகள் தவிர மீதமுள்ள 56 துறைகளுக்கான விடைத்தாள்களும் திருத்தப்பட்டு விட்டதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்த நிலையில், அவற்றின் முடிவுகளை மார்ச் மாதத்திற்குள்ளாகவே வெளியிட்டிருக்க முடியும். அதற்கு எந்த தடையும் இல்லை. ஆனாலும் தேர்தல் நடைமுறைகளைக் காரணம் காட்டி ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுகளை வெளியிடவில்லை.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டும், தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்தும் 40 நாள்கள் ஆகும் நிலையில், இன்னும் கூட முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்காதது நியாயமில்லை. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடங்கும் நிலையில், புதிய உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்படாததால் மாணவர்களுக்கு பாடம் நடத்த போதிய ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 8,000-க்கும் மேற்பட உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், அவற்றை நிரப்பாமலும், தேர்வு நடத்தப்பட்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களை நியமிக்காமலும் ஆசிரியர் தேர்வு வாரியம் காலம் கடத்துவது சரியல்ல. 2,708 பணியிடங்களில் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட 5 பேர் தவிர மீதமுள்ள 2,705 பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியலை இம்மாத இறுதிக்குள் அரசும், தேர்வு வாரியமும் வெளியிட வேண்டும்.

உதவிப் பேராசிரியர்கள் நியமனம் தொடர்பான வழக்கில் கடந்த மே 27-ம் தேதி சென்னை ஐகோர்ட்டு அளித்தத் தீர்ப்பின்படி, மேலும் 1,292 உதவிப் பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையையும் ஆசிரியர் தேர்வு வாரியம் உடனடியாக வெளியிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.