தமிழக செய்திகள்

நாசரேத்தில் நடந்த சதுரங்க போட்டியில்வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு

நாசரேத்தில் நடந்த சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

நாசரேத்:

தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழகம், நாசரேத் ஒய்.எம்.சி.ஏ. ஆகியவை இணைந்து மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகளை மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் நடத்தின.

போட்டிகள் 9 வயது, 11 வயது, 13 வயது, 15 வயது மற்றும் 21 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் மாணவ, மாணவியருக்கு தனித்தனியாக நடைபெற்றன. நாசரேத் கதீட்ரல் தலைமை குருவானவர் ஹென்றி ஜீவானந்தம் ஆரம்ப ஜெபம் செய்தார். போட்டி அமைப்புக் குழு உறுப்பினர் லேவி அசோக் சுந்தரராஜ் வரவேற்றார். பள்ளி தாளாளர் சுதாகர் புறாக்களை பறக்கவிட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சார்ந்த 300-க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர், வீராங்கனைகள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன. வெற்றிபெற்றவர்களுக்கு தியாகி டி.கே.செல்லத்துரை நினைவாக ஒய்.எம்.சி.ஏ. நாசரேத் வெற்றிக்கோப்பைகள் வழங்கப்பட்டன.

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி இயக்குனர் பெலின் பாஸ்கர், உடற்கல்வி ஆசிரியர்கள் சுஜித் செல்வசுந்தர் மற்றும் தனபால் ஆகியோர் சதுரங்க போட்டிகளுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு ஒய்.எம்.சி.ஏ தலைவர் எபனேசர் வரவேற்றார். பள்ளி தாளாளர் சுதாகர் பரிசுகளை வழங்கினார். ஒய்.எம்.சி.ஏ செயலர் சாமுவேல் ராஜ் நன்றி கூறினார். இயற்பியல் ஆசிரியர் ஹெர்சோம் ஜெபராஜ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

SCROLL FOR NEXT