மதுரை,
மதுரை கோ.புதூர் இ.எம்.ஜி. நகரைச் சேர்ந்தவர் மணிமுத்து (வயது 29). இவருடைய மனைவி சக்திகாளி (22). நிறைமாத கர்ப்பிணியான சக்திகாளியை பிரசவத்திற்காக நேற்று முன்தினம் புதூர் பிரதான சாலையில் உள்ள நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு சில பரிசோதனைகள் செய்யப்பட்டன. மேலும் இரவு 8 மணிக்கு குழந்தை பிறக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். ஆனால், இரவு 8 மணிக்கு குழந்தை பிறக்கவில்லை. இந்த நிலையில் அங்கு சிகிச்சையில் இருந்த சக்திகாளிக்கு குழந்தை பிறக்காத நிலையில் அவர் பரிதாபமாக இறந்து விட்டார். இந்த தகவலை மருத்துவமனை ஊழியர்கள், மணிமுத்துவிடம் தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது மனைவியை எப்படியும் காப்பாற்றி விடலாம் என்று ஆம்புலன்ஸ் மூலம் மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சக்திகாளி இறந்து விட்டதை உறுதிப்படுத்தினர்.
ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் பணியில் இல்லாத நிலையில் செவிலியரின் தவறான சிகிச்சையாலேயே சக்திகாளி உயிரிழந்து விட்டதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து மணிமுத்து கூறும்போது, எனது மனைவியை 14-ந் தேதி மதியம் 2 மணிக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தேன். அப்போது டாக்டர் பரிசோதனை செய்து விட்டு, தாயும் வயிற்றில் உள்ள குழந்தையும் நலமாக உள்ளதாக தெரிவித்தனர். மேலும், இரவு 8 மணிக்கு குழந்தை பிறந்துவிடும் என்றும் கூறினார். இரவு 9 மணிக்கு உறவினர்கள் அங்கிருந்த செவிலியரிடம் கேட்டபோது குழந்தை 9 மணிக்கு மேல் பிறக்கும் என்று கூறினார்.
இதற்கிடையே, என் மனைவியின் அலறல் சத்தம் அதிகமாக கேட்டுக்கொண்டே இருந்தது. எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும் விடவில்லை.
இதனைத் தொடர்ந்து உள்ளே சென்று பார்த்தபோது ரத்தப்போக்கு அதிகமாகி எனது மனைவி இறந்தது தெரியவந்தது. அவரது முகத்தில் காயங்களும் இருந்தன. என் மனைவியின் இறப்பில் சந்தேகம் உள்ளது. மருத்துவமனையில் இரவு பணியில் டாக்டர் இல்லை, செவிலியர் மட்டுமே இருந்தார். தவறான சிகிச்சையால் தான் என் மனைவி இறந்தார். இவ்வாறு அவர் கூறினார்.
இதுபோல், மனைவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக புதூர் போலீசிலும் மணிமுத்து புகார் அளித்துள்ளார்.