திருவாரூர்,
திருவாரூர் அருகே கூடூர் கிராமத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். எந்திரம் ஒன்றை உடைத்து கொள்ளை முயற்சியில் சிலர் ஈடுபட்டு உள்ளனர். இதனை வங்கி அமைந்துள்ள கட்டிடத்தின் உரிமையாளர் கவனித்து உள்ளார்.
அதனால் அவர் ஓடி சென்று கொள்ளையர்களை தடுத்து உள்ளார். இதில் அவர்கள் கடுமையாக தாக்கி கத்தியால் குத்தியுள்ளனர். இந்த சம்பத்தில் படுகாயமடைந்த அந்த முதியவர் உயிரிழந்து உள்ளார்.
நள்ளிரவில் ஏ.டி.எம். இயந்திரம் உடைக்கப்படும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் திரண்டுள்ளனர். இதேபோன்று அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சம்பவம் பற்றி அறிந்து மதன் என்பவரை கைது செய்தனர். உடன் வந்த 3 பேர் இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடிவிட்டனர்.
இந்நிலையில், கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் ஊட்டியாணி பகுதியை சேர்ந்த பிரதாப், ஆகாஷ், விஜய் ஆகியோர் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் 20 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஆவர். இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.