தஞ்சாவூர்,
தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
தமிழக சட்டசபை தேர்தலில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தொகுதியில், தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஏ.எம்.ஷாஜகான், அ.தி.மு.க. சார்பில் டி.சண்முகபிரபு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அசாருதீன், நாம் தமிழர் கட்சி சார்பில் அனிஷ் பாத்திமா ஆகியோர் களத்தில் உள்ளனர்.
இந்த நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக உள்ள நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அனிஷ் பாத்திமாவை தி.மு.க.வினர் தாக்கிவிட்டதாக, அவருடைய கணவர் குற்றம்சாட்டியுள்ளார். தற்போது, அனிஷ் பாத்திமா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவம் பாபநாசம் தொகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.