தமிழக செய்திகள்

போலி பட்டா தயாரித்து கிராம சமுதாய சங்க நிலம் ஆக்கிரமிப்பு முயற்சி: முதியவருக்கு 2 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் பகுதியில் ஒரு முதியவர், போலி பட்டா தயாரித்து கிராம சமுதாய சங்க நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி செய்துள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் போலி பட்டா தயாரித்து கிராம சமுதாய சங்க நிலத்தை ஆக்கிரமிக்க முயன்ற முதியவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஓட்டப்பிடாரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

போலி லெட்டர் பேட்

தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் காவல் எல்லைக்குட்பட்ட வேப்பலோடை கிராமத்தில் உள்ள 0.33 ஏக்கர் நிலமானது கிராம சமுதாய சங்கத்தின் அனுபவத்தில் இருந்து வந்தது. இந்த நிலையில் வேப்பலோடை வடக்கு தெருவைச் சேர்ந்த செல்லையா மகன் செல்வம் (வயது 60) என்பவர், சமுதாய சங்கத்தின் போலியான லெட்டர் பேட் ஒன்றை சட்ட விரோதமாக தயார் செய்துள்ளார்.

போலி ஆவணம் தயாரிப்பு

அதைப் பயன்படுத்தி, அந்த நிலத்திற்கு தனது தந்தையின் பெயரையும் இணைத்து கூட்டுப் பட்டாவாக மாற்றியுள்ளார். இந்த ஆள்மாறாட்டம் மற்றும் போலி ஆவணத் தயாரிப்பு குறித்து வேப்பலோடையைச் சேர்ந்த காசி(72) என்பவர் தருவைகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், அப்போதைய தருவைகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி (தற்போது மதுரை சைபர் கிரைம்) வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

2 ஆண்டுகள் சிறை தண்டனை

இந்த வழக்கு ஓட்டப்பிடாரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், செல்வம் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், ஓட்டப்பிடாரம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தரணிதரன், 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.16 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

SCROLL FOR NEXT