கம்பம்.
தேனி மாவட்டம், கம்பத்தில் இருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்துவதாக கம்பம் வடக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார் கம்பம் புதிய பஸ் நிலையம் கீழ்புறம் காமயகவுண்டன்பட்டி செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும் படியாக மோட்டார் சைக்கிளில் டிராவல் பேக்குடன் நின்றிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது, அதில், 3 பார்சல்களில் மொத்தம் 8 கிலோ 685 கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள், கம்பம் மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஈஸ்வரன் (வயது 48), கன்னியாகுமரி மாவட்டம் முட்டைக்காடு பகுதியை சேர்ந்த அந்தோணி ராஜ் (61) என்பதும் கேரளாவிற்கு கஞ்சா கடத்த முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.