தமிழக செய்திகள்

அடுத்தடுத்து 3 வீடுகளில் திருட முயற்சி... ஆயுதங்களுடன் வந்த நபரால் பரபரப்பு

ஆயுதங்களால் பொருட்களை சேதப்படுத்தி வீட்டின் உள்ளே செல்ல முயற்சித்த நபரை விரைந்து கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்

நாமக்கல்,

பரமத்தி வேலூரில் அடுத்தடுத்து 3 வீடுகளில் மர்ம நபர் திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

மர்ம நபர் திருட முயற்சி

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் கைகோளார் தெருவில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 16) இரவு முகத்தை முழுவதுமாக துணியால் மூடியபடி, கையில் ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர் ஒருவர், வீடுகளில் திருட முயன்றதாக கூறப்படுகிறது. பூட்டை உடைக்க முயன்றதுடன், அங்கிருந்த சிசிடிவி கேமராவையும் ஆயுதத்தால் தாக்கி சேதப்படுத்தியுள்ளார்.

இந்த சத்தத்தைக் கேட்டு எழுந்த அப்பகுதி பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்து பார்த்துள்ளனர். அப்போது மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

பின்னர் அச்சத்தில் இருந்த மக்கள் அருகில் உள்ள மற்றொரு சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, மர்ம நபர் வீடுகளில் திருட முயன்றதும், பொருட்களை சேதப்படுத்தியதும் பதிவாகியிருந்தது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் பரமத்தி வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், திருட்டு முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபரை விரைந்து கைது செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆயுதங்களுடன் முகத்தை மூடியபடி மர்ம நபர் நடமாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பொதுமக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த திருட்டு முயற்சி தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.