மும்பை,
மராட்டிய மாநில உணவு பாதுகாப்பத்துறை அதிகாரிகளுக்கு கடந்த 16-ந்தேதி ஒரு புகார் வந்துள்ளது. அந்த புகாரில், ஒலிம்பியா உணவகத்தில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. மேலும் அதில் பல அதிர்ச்சி தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
சம்பந்தப்பட்ட உணவகத்தில் உணவுகள் வைக்கப்படக்கூடிய இடத்திற்கும், சிறுநீர் கழிக்கக் கூடிய இடத்திற்கும் இடையில் பிரிவினை எதுவும் இல்லாமல் இருந்ததாகவும், அந்த இடம் முழுவதும் கரப்பான் பூச்சிகளும், ஈக்களும் நிறைந்து அசுத்தமாக, மிக மோசமான நிலையில் இருந்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கை கழுவும் இடம் சுத்தமாக இல்லை, சமைக்கக்கூடிய இடம் சுத்தமாக இல்லை, தண்ணீர் வைத்திருந்த இடமும் சுகாதாரமாக இல்லை, சைவம் மற்றும் அசைவ உணவுகள் முறையாக பிரித்து வைக்கப்படவில்லை என ஏகப்பட்ட புகார்கள் அந்த உணவகத்தின் மீது வைக்கப்பட்டுள்ளன.
அதேபோல் அங்க வேலை செய்யும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களோ, பாதுகாப்பு உடைகளோ வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்ட நிலையில், மராட்டிய மாநில உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு சென்று ஆய்வு செய்தபோது, குற்றச்சாட்டுகள் எல்லாம் உண்மை என்பதை கண்டறிந்தனர்.
இதையடுத்து அந்த உணவகத்தின் உரிமத்தை ரத்து செய்த அதிகாரிகள், உணவகத்திற்கு சீல் வைத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். சம்பந்தப்பட்ட உணவக நிர்வாகம் தவறுகளை சரிசெய்து உரிமத்தை மீண்டும் பெறுவதற்காக விண்ணப்பித்தால், அதிகாரிகள் மறுபடியும் ஆய்வு செய்து சீல் வைக்கப்பட்ட உணவகத்தை மீண்டும் திறப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.