திருநெல்வேலி, மேலப்பாளையம் பீடி காலனியைச் சேர்ந்த உடையார் மகன் ராமகிருஷ்ணன் (வயது 47). இவர் கடந்த 2007-ம் ஆண்டு கொலை வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை பெற்று, தண்டனை காலம் முடித்து விடுதலையாகி, தற்போது அவர் ஆட்டோ ஓட்டி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு தச்சநல்லூர், சிவன் கோவில் அருகில் வைத்து ஆட்டோவில் பயணித்த குருவிக்னேஷ், பந்தல் மகாராஜா மற்றும் ஒருவர் சேர்ந்து ராமகிருஷ்ணனை அரிவாளால் தலை மற்றும் கைகளில் வெட்டி உள்ளனர்.
அதில் காயமடைந்த ராமகிருஷ்ணன், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் காயம்பட்ட ராமகிருஷ்ணனின் சகோதரர் கொடுத்த புகாரின் பேரில் தச்சநல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய தச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.