சென்னை,
காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து கடத்தப்பட்ட சிறுமியை விழிப்புணர்வுடனும் துரிதமாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநர் மற்றும் ரோந்து காவலர்கள் உதவியுடன் தமிழ்நாடு காவல்துறையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
விவசாய கூலி வேலைக்காக சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு 2 மகன்கள் மற்றும் 2 மகள்களுடன் தங்களது சொந்த மாநிலத்திலிருந்து திருச்சி மாவட்டத்திற்கு வந்திருந்த ஒரு குடும்பத்தினர், வேலை முடிவடைந்தவுடன் 01.07.2026 அன்று திருச்சியிலிருந்து புறப்பட்டு, தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்காக சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தை வந்தடைந்தனர். அவர்கள் செல்ல வேண்டிய ரெயில் 02.07.2026 காலை புறப்பட இருந்ததால், ரெயில் நிலையத்திற்கு வெளியே இரவு குடும்பத்துடன் தங்கியிருந்தனர்.
இந்நிலையில், 02.07.2026 அதிகாலை சுமார் 03.00 மணியளவில், தன்னருகில் உறங்கி கொண்டிருந்த தனது இளைய மகள் காணாமல் போனதை தந்தை கவனித்தார். இதையடுத்து அவர்கள் பதற்றத்துடன் சிறுமியை பல இடங்களில் தேடத் தொடங்கினர். அதே நேரத்தில், அப்பகுதியில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் முருகன், ஒரு நபர் சிறுமியை அழைத்துச் செல்வதை கவனித்தார். சிறுமியும் அந்த நபரும் வெவ்வேறு மொழிகளில் பேசிக்கொண்டிருந்ததாலும், அந்த நபரின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்கிடமாக இருந்ததாலும், அவர் உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தார்.
விசாரணையில் திருப்திகரமான பதில் கிடைக்காததால், பொதுமக்களுக்கான பொறுப்புணர்வுடன் செயல்பட்ட . முருகன், அச்சிறுமியை பாதுகாப்பாக மீட்டதுடன் உடனடியாக ரோந்து காவலர்களுக்கும் தகவல் தெரிவித்தார்.
காவல்துறையினர் சிறுமியை பாதுகாப்பாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்ததுடன், சசிகுமார் (45) என்பவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் சிறுமியை கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது.
இதுகுறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில், சென்னை ஜி2 (G2) பெரியமேடு காவல் நிலையத்தில் குற்ற எண் 159/2026-ன் கீழ் பிரிவு 137(2)-இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார், இந்த சம்பவத்தில், சிறுமியை பாதுகாப்பாக மீட்டு, ஒரு கடத்தல் முயற்சியை தடுத்து நிறுத்துவதில் விழிப்புணர்வுடனும், தைரியத்துடனும், சமூகப் பொறுப்புணர்வுடனும் செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநர் முருகன் செயலை பாராட்டி, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / காவல்துறை தலைவர் பாராட்டு மற்றும் வெகுமதி வழங்கி கௌரவித்தார்.
முருகனின் துரிதமான நடவடிக்கை மற்றும் பொது நல அக்கறை, ஒரு சிறுமியின் பாதுகாப்பை உறுதி செய்ததுடன், குற்றம் நடைபெறுவதை தடுக்கவும் உதவியுள்ளது. அவரது செயல், பொதுமக்களின் விழிப்புணர்வு மற்றும் காவல்துறையினருடன் இணைந்த ஒத்துழைப்பு சமூக பாதுகாப்பை வலுப்படுத்துவதில் எவ்வளவு முக்கியமானது என்பதை எடுத்துக்காட்டும் சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.