சென்னை,
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர்கள் வாக்களிப்பதை உறுதி செய்திடும் வகையில், வாக்காளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் 13 எல்.இ.டி. தொலைக்காட்சிகளுடன் கூடிய தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சிப் பேருந்து, வீடுகள் தோறும் திடக்கழிவுகள் சேகரிக்கும் பேட்டரியால் இயங்கக்கூடிய மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் காம்பாக்டர் பெரிய வாகனங்கள் மற்றும் 300 அரசு பேருந்துகள், 100 மின்னணு விளம்பரப் பலகைகள் மற்றும் 1000 பேருந்து நிறுத்த நிழற்குடைகள் ஆகியவற்றில் “நம்ம தங்கா” எனும் காகம் சின்னத்தை (Mascot) மையப்படுத்தி தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள், எனது வாக்கு எனது உரிமை என்ற சுயபுகைப்பட (Selfie Point) பதாகை, கடற்கரையில் மணற்சிற்பம், மொம்மலாட்ட நிகழ்ச்சி, பாரா க்ளைடிங், மனிதச் சங்கிலி, ரங்கோலி, நாட்டுப்புற கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு கரகாட்டம், கானா பாடல்கள், கும்மிபாட்டு, தப்பாட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகள், திடீர் குழு நடனம் (Flashmob) மற்றும் தேர்தல் தொடர்பான வினாடி வினா, கையெழுத்து இயக்கம், பொது இடங்களில் விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றல் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, 31.03.2026 அன்று விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி, கோயம்பேடு மார்க்கெட் பகுதிகளில் உள்ள வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வலியுறுத்தி, தேர்தல் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை நேரில் வழங்கி, அவர்களின் கடைகளில் தேர்தல் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகள் ஒட்டப்பட்டு, தேர்தல் நாளான ஏப்ரல் 23 அன்று தவறாமல் வாக்களிக்க எடுத்துரைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி, வியாசர்பாடி, செயின்ட் தாமஸ் முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு படிவம் 12D மூலம் வாக்களிப்பது, விருப்பமுள்ளவர்கள் வாக்குச்சாவடிகளுக்கு நேரில் சென்று வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின்னர் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.