சென்னை,
தமிழக முதல்-அமைச்சர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த படத்தில், பள்ளி குழந்தைகளிடம் ‘குட் டச், பேட் டச்’ (Good touch, Bad touch) குறித்து விஜய் விளக்குவது போன்ற விழிப்புணர்வு காட்சி இடம்பெற்றிருந்தது. பெண் குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் அத்துமீறல் குறித்து உடனடியாக பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும் என்று அந்த காட்சியில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், ‘ஜனநாயகன்’ படத்தில் வரும் விழிப்புணர்வு காட்சியை பார்த்து, சென்னையை சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் தனக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல் குறித்து தந்தையிடம் கூறியதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நபர் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசாரால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கே.கே.நகரை சேர்ந்த தம்பதிக்கு 11 வயதில் மகனும், 8 வயதில் மகளும் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக அந்த தம்பதியினர் சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். குழந்தைகள் இருவரும் தந்தையுடன் வசித்து வரும் நிலையில், தாய் கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் தங்கி அங்கேயே வீட்டு வேலை செய்து வருகிறார். அந்த தாய் சில சமயங்களில் தனது குழந்தைகளை, தான் வேலை செய்யும் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இந்நிலையில், கடந்த 30-ந்தேதி சிறுமியும், அவரது தந்தையும் ‘ஜனநாயகன்’ படம் பார்ப்பதற்காக சென்றுள்ளனர். அந்த படத்தில் வரும் பாலியல் அத்துமீறல் தொடர்பான விழிப்புணர்வு காட்சியை பார்த்த சிறுமி, இதே போன்ற சம்பவம் தனக்கு நடந்துள்ளதாக தந்தையிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை, ‘யார் அவ்வாறு செய்தது?’ என்று விசாரித்துள்ளார்.
தனது தாய் வேலை செய்து வரும் வீட்டில் உள்ள ஒரு நபர் தன்னிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக சிறுமி தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியின் தந்தை உடனடியாக இது குறித்து வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட பெரியன் என்ற நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.