தமிழக செய்திகள்

ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்

சென்னையில் வசிப்பவர்கள் பெரும்பாலும் வெளியூரைச் சேர்ந்தவர்கள்தான்.

சென்னை,

தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் சுமார் 1 கோடி பேர் வசித்து வருகின்றனர். இது தமிழக மொத்த மக்கள்தொகையில் 8-ல் ஒரு பங்கு ஆகும். சென்னையில் வசிப்பவர்கள் பெரும்பாலும் வெளியூரைச் சேர்ந்தவர்கள் தான். வேலைக்காகவே இங்குவந்து தங்கியுள்ளனர். இவர்கள் பண்டிகை மற்றும் முக்கிய நாட்களில் சொந்த ஊர் செல்வது வழக்கம்.

அந்த வகையில், நாளை (புதன்கிழமை) ஆயுதபூஜை கொண்டாடப்பட இருக்கிறது. அடுத்த நாள் காந்தி ஜெயந்தி மற்றும் விஜயதசமி என்பதால் தொடர்ந்து 2 நாள் விடுமுறை வருகிறது. மேலும், தற்போது பள்ளி மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு முடிந்து விடுமுறை வேறு விடப்பட்டுள்ளதால், பலர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

அதற்கு வசதியாக, கிளாம்பாக்கம், கோயம்பேட்டில் இருந்து சிறப்பு பஸ்களும், சென்டிரல், எழும்பூரில் இருந்து சிறப்பு ரெயில்களும் தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன. இன்று வரை சிறப்பு பஸ்கள் மூலம் 1 லட்சம் பேர், சிறப்பு ரெயில்கள் மூலம் 3 லட்சம் பேர் என மொத்தம் 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம் மேற்கொண்டுள்ளனர். இவர்கள் ஆயுதபூஜையை முடித்துக்கொண்டு சென்னை திரும்புவதற்காகவும் சிறப்பு பஸ்கள், ரெயில்கள் இயக்கப்பட இருக்கின்றன.

SCROLL FOR NEXT