தமிழக செய்திகள்

ஆயுதபூஜை பண்டிகை: கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்; அமைச்சர் ராஜகண்ணப்பன்

ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் வருகிற 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு அறிவித்து உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு பயணம் செய்யும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும். சென்னையில் இருந்து ஊருக்கு செல்வோர் எண்ணிக்கையும் அதிக அளவில் இருக்கும்.

இதனால், பேருந்துகளில் கூட்ட நெரிசல் ஏற்படாமல் தவிர்க்க அரசு போக்குவரத்து துறை கூடுதல் பேருந்துகளை இயக்க உள்ளது. அதன்படி, வெளியூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரெயில் நிலைய பேருந்து நிலையம், பூந்தமல்லி மற்றும் கோயம்பேடு ஆகிய 3 இடங்களில் இருந்து இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார்.

இந்த பேருந்துகள், வருகிற 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளன. இதன்படி, தாம்பரம் ரெயில் நிலைய பேருந்து நிலையத்திலிருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள்.

திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் செல்லும் பேருந்துகள். திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதேபோன்று, பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சீபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மற்ற பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

SCROLL FOR NEXT