தமிழக செய்திகள்

அய்யா வைகுண்டர் 194வது அவதார நாள்: பக்தர்களுக்கு வாழ்த்து தெரிவித்த தமிழ்நாடு கவர்னர்

சமூகத்தில் சமத்துவம், நீதி மற்றும் கண்ணியத்தை அய்யா அவர்கள் வளர்த்தெடுத்தார் என்று ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

அய்யா வைகுண்டர் அவர்களின் 194வது அவதார தினத்தையொட்டி, இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள அய்யா வழி பக்தர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சி நமது நாகரிக அடையாளத்தை அழித்து நமது மக்களை அடக்க முயன்ற காலத்தில், விஷ்ணுவின் தெய்வீக அவதாரமான அய்யா வைகுண்டர், தர்மத்தை காக்கவும், சமூக வலிமையை மீட்டெடுக்கவும், சனாதன தர்மத்தின் உணர்வை மீண்டும் தட்டியெழுப்பும் வகையில் அவதரித்தார். ஒடுக்குமுறைக்கு சவால் விடுத்து, சமூக பாகுபாட்டை களைந்த அவர் நமது கலாசாரம் மற்றும் தார்மீக அடித்தளங்களை மீண்டும் நிலைப்படுத்தினார்.

அய்யா அவர்கள், உலகளாவிய சகோதரத்துவத்தை ஒளிரச் செய்து சமூகத்தில் சமத்துவம், நீதி மற்றும் கண்ணியத்தை வளர்த்தெடுத்தார். அவரது வாழ்க்கை மற்றும் போதனைகள் நம்மை ஒரே குடும்பமாக தொடர்ந்து வழிநடத்துவதுடன் வளமான, நீதிசார்ந்த மற்றும் ஆன்மிக ரீதியாக அடித்தளமிடும் வளர்ச்சியடைந்தபாரதத்தை கட்டியெழுப்புவதற்கு உத்வேகம் அளிக்கின்றன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.