கரூர்,
கரூர் மாவட்டம், சோமூர் பகுதியில் வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தி, உறவினர்களுக்கு விருந்து அளித்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்தது.
கரூர் மாவட்டம், சோமூர் பகுதியை சேர்ந்தவர் கோமதி. இவர் தனது வீட்டில் சாரா என்னும் சிட்சு வகையிலான நாயை செல்லமாக வளர்த்து வருகிறார். சாராவின் மீது வீட்டில் உள்ள அனைவருக்கும் பாசம் அதிகம். இந்த நிலையில் சாராவிற்கு வருகிற 15 முதல் 20-ந் தேதிக்குள் குட்டி பிறக்க உள்ளது. இதையொட்டி கோமதி குடும்பத்தினர் நேற்று முன்தினம் அவர்களது வீட்டில் செல்ல நாய் சாராவிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினர்.
அப்போது பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்படுவதுபோல. நாய் சாராவிற்கு தட்டுகளில் மிக்சர், பிஸ்கட், பழங்கள், பூக்கள், நாய்களுக்கென பிரத்யேகமாக வழங்கப்படும் உணவுகள் உள்ளிட்டவற்றை சீர்வரிசைகளாக கொண்டு வந்து வளைகாப்பு நடத்தப்பட்டது. இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் கோமதியின் உறவினர்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு விருந்தும் அளிக்கப்பட்டது. வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சி அடைய செய்தது.