தென்மேற்கு பருவமழை காரணமாக தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது.
வெள்ளப்பெருக்கு
அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றாலம் மெயின் அருவியில் பராமரிப்புப் பணி காரணமாக முன்னதாகவே குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மற்ற அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குற்றாலம் பகுதிக்கு வருகை தந்து, அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்று வருகின்றனர். இன்று காலையில் மழைப்பொழிவு குறைந்து, அருவிகளுக்கு வரும் தண்ணீர் வரத்தும் சீரான பிறகு, சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.