சென்னை,
தமிழகத்தில் கோவில்களுக்குள் செல்போன் கொண்டு செல்வதற்கான தடை செப்டம்பர் 1-ந்தேதி முதல் முழுமையாக அமலுக்கு வர உள்ளது என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
கோவில்களின் ஆன்மீக சூழல் மற்றும் அமைதியை பேணிக்காக்கும் வகையிலும், விதிகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் கோவிலுக்குள் செல்போன்களை பயன்படுத்த ஏற்கனவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இந்த தடை உத்தரவு வரும் செப்டம்பர் 1-ந்தேதி முதல் முழுமையாக அமலுக்கு வருகிறது.
இது தொடர்பாக அனைத்துக் கோவில் நிர்வாகங்களுக்கும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதன்படி, இனி பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் கோவிலுக்குள் செல்போன்களை எடுத்துச் செல்ல அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை மீறி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லப்பட்டு, அதன் மூலம் புகைப்படம் அல்லது வீடியோ எடுக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக காவல்துறையில் புகார் அளிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதே போல், வி.ஐ.பி.க்கள், சினிமா பிரபலங்கள் கோவில்களுக்கு வரும்போது அவர்களுடன் ஊடகத்தினர் அல்லது தனிப்பட்ட நபர்கள் சென்று வீடியோ அல்லது புகைப்படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.