ராமேசுவரம்,
இந்தியாவில் உள்ள முக்கிய ஆன்மிக தலங்களில் ஒன்றாக ராமேசுவரம் கோவில் விளங்குகிறது. தனுஷ்கோடி அரிச்சல் முனையானது சிறந்த சுற்றுலா தலமாகும். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ராமேசுவரம். தனுஷ்கோடி வந்து செல்கின்றனர். சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் தனுஷ்கோடியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
அத்துடன் சுற்றுலா பயணிகள் தாங்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பை, தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட குப்பைகளை கடற்கரையில் ஆங்காங்கே வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் கடல் மாசுபடுவதுடன், மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி கடல் பகுதி யில் வாழும் அரியவகை கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது.
எனவே தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை சுற்றுலா வாகனங்கள் செல்வதற்கு விரைவில் தடை விதிக்கப்படுகிறது. அரசு பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும், புயலால் அழிந்துபோன கட்டிட சிதிலங்கள் உள்ள கம்பிப்பாடு வரை மட்டுமே அனுமதிக்கப்படும். அதிலிருந்து வனத்துறை மூலம் இயக்கப்படும் சிறப்பு பஸ்களில் சுற்றுலா பயணிகள் 5 கிலோ மீட்டர் தூரமுடைய கடைக்கோடி பகுதியான அரிச்சல்முனை வரை அழைத்து செல்லப்பட்டு மீண்டும் அதே பஸ்சில் கம் பிப்பாடுக்கு அழைத்து வரப்படுவார்கள்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:- சுற்றுச்சூழல், கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்கும் வகை யிலும், கடற்கரை பகுதியை தூய்மையாக வைப்பதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த 7 பஸ்களும் இயற்கை எரிவாயு மூலம் இயங்கும். சுற்றுலா வாகனங்கள், அரசு பஸ்களுக்கு அரிச்சல்முனை வரை அனுமதிஇல்லை.
அதேநேரம் அனுமதி உள்ள எரிவாயுவில் இயங்கும் ஆட்டோக்கள் மட்டும் சுற்றுலா பயணிகளுடன் அரிச்சல்முனை வரை செல்ல அனுமதிக்கப்படும். வனத்துறை பஸ்களில் அழைத்து செல்லப்படும் சுற்றுலா பய ணிகளுக்கான கட்டணம் விரைவில் நிர்ணயம் செய்யப்படும். ஒரு பஸ்சில் 35 பேர் அமர்ந்து பயணம் செய்யலாம். சுற்றுலா வாகனங்களை நிறுத்தும் வகையில் கம்பிப்பாடு பகுதியில் வாகன நிறுத்துமிடம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் இந்த திட்டம் அமலுக்கு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.