தமிழக செய்திகள்

ஆடிப்பெருக்கை முன்னிட்டு வாழைத்தார் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

பரமத்திவேலூரில் உள்ள ஏல சந்தைக்கு வாழைத்தார்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

நாமக்கல்,

வாழைத்தார் சந்தை

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான பொத்த னூர், பாண்டமங்கலம், குச்சிப்பாளையம், வெங்கரை, நன்செய்இடையாறு, அனிச்சம்பாளையம், குப்புச்சிபாளையம், பொய்யேரி, ஓலப்பாளையம், செங்கப்பள்ளி, எல்லைமேடு உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வாழைத்தார் களை விவசாயிகள் பரமத்திவேலூரில் உள்ள வாழைத்தார் ஏல சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

ஏலத்தில் சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வாழைத்தார்களை ஏலத்திற்கு எடுத்து செல்கின்றனர். ஏலம் எடுக்கப்பட்ட வாழைத்தார்களை வியாபாரிகள் ஆந்திரா, கேரளம், கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வருகின்றனர்.

விலை உயர்வு

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் ஒன்று ரூ.400 வரையிலும், பச்சைநாடன் வாழைத்தார் ஒன்று ரூ.350 வரையிலும், ரஸ்தாளி வாழைத்தார் ஒன்று ரூ.350 வரை யிலும், கற்பூரவள்ளி வாழைத்தார் ஒன்று ரூ.400 வரையிலும், மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.5 வரையிலும், செவ்வாழை காய் ஒன்று ரூ.8 வரையிலும் ஏலம் போனது.

இந்தநிலையில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு இன்று நடை பெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் ஒன்று அதிகபட்சமாக ரூ.550-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் ஒன்று ரூ.450-க்கும். ரஸ்தாளி வாழைத்தார் ஒன்று ரூ.450-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ஒன்று ரூ.500-க்கும், மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.7-க்கும், செவ்வாழை ஒரு காய் ஒன்று ரூ.10-க்கும் ஏலம் போனது. வாழைத்தார்கள் விலை உயர்ந்துள்ளதால் வாழை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.