தமிழக செய்திகள்

வங்கி மேலாளரை தாக்கிய விவகாரம்: மு.க. அழகிரியின் மகளிடம் விசாரணை

கயல்விழி வங்கி மேலாளரின் கன்னத்தில் அறைந்து அவரை தாக்கியுள்ளார்.

சென்னை,

திமுக தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினின் சகோதரர் மு.க. அழகிரி. இவர் திமுக தென்மண்டல அமைப்பு செயலாளராகவும், முன்னாள் மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார்.

பின்னர் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி தற்போது கட்சியில் இருந்து ஒதுங்கி உள்ளார். மு.க.அழகிரியின் மகள் கயல்விழி. இவருக்கு சென்னை அடையாறில் சொந்தமாக ஒரு கட்டிட வளாகம் உள்ளது. இதில் எஸ்பிஐ வங்கி செயல்பட்டு வருகிறது.

எஸ்பிஐ வங்கி செயல்படும் கட்டிடத்தின் லிப்ட் செயல்படாததாதால் உரிமையாளரான கயல்விழியிடம் புகார் அளித்துள்ளனர்.

கயல்விழி தாக்குதல்

இது தொடர்பாக கடந்த 25ம் தேதி எஸ்பிஐ வங்கிக்கு வந்த கயல்விழி வங்கி மேலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், வங்கி மேலாளரின் கன்னத்தில் அறைந்து அவரை தாக்கியுள்ளார்.

இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் கயல்விழி மீது அடையாறு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

விசாரணை

இந்நிலையில், வங்கி மேலாளரை தாக்கிய சம்பவத்தில் கயல்விழியிடம் போலீசார் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர். அடையாறு போலீஸ் நிலையத்தில் கயல்விழியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.