சென்னை,
தமிழகத்தில் நடைபெற்று வரும் த.வெ.க. ஆட்சியை கவிழ்க்க, அக்கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் தி.மு.க. தரப்பில் பேரம் பேசப்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக, ஊத்தங்கரை தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. டாக்டர் இளையராஜா, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் புகார் அளித்தார்.
அந்த புகார் மனுவில், த.வெ.க. அரசை கவிழ்க்க தன்னிடம் ரூ.35 கோடி பேரம் பேசியதாக கூறியிருந்தார். இந்த நிலையில், அவர் கூறிய தகவல்களின் அடிப்படையில், ஐ.பி.டி.எஸ். என்ற தேர்தல் கருத்து கணிப்பு நிறுவனத்தின் நிறுவனர் திருநாவுக்கரசு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களான சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த தியாகராஜன், பெசன்ட்நகரை சேர்ந்த நரேஷ், கரூரை சேர்ந்த ரமேஷ், கார்த்தி, சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த செல்வன், மணப்பாக்கத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் சீனிவாசன், அஸ்தினாபுரத்தை சேர்ந்த ராஜேஷ் ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், த.வெ.க. ஆட்சியை கவிழ்க்க அக்கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க ரூ.180 கோடியில் சதித்திட்டம் தீட்டப்பட்டதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராக சென்னை போலீசார் இன்று கரூர் மாவட்டம் ராமேஸ்வரபட்டியில் உள்ள அவரது பூர்வீக வீட்டில் சம்மன் அளித்தனர். இந்த சம்மனை செந்தில் பாலாஜியின் தந்தை பெற்றுக்கொண்டார். வரும் திங்கட்கிழமை, அதாவது ஜூலை 6-ந் தேதி ஆஜராகுமாறு அந்த சம்மனில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் த.வெ.க. ஆட்சியை கவிழ்க்க பேர நடத்தப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமாருக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.இதனிடையே செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் தலைமறைவாக உள்ளதாக திருவல்லிக்கேணி போலீஸ் தகவல் தெரிவித்துள்ளனர்.