ஊட்டி: நீலகிரி மாவட்டம் குன்னூர் நகரை ஒட்டி உள்ள கிராம பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் சமீபகாலமாக அதிகரித்து உள்ளது. தற்போது வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் கரடிகள், குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து பொருட்களை சேதப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் குன்னூர் அருகே உள்ள பேரட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக ஆரம்ப பள்ளி சத்துணவு கூடத்திற்குள் புகும் கரடி, அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் பேரட்டி ஆரம்ப பள்ளிக்குள் புகுந்த கரடி, அங்குள்ள சத்துணவு கூட்டத்தை உடைத்து உணவு பொருட்களை சேதப்படுத்தியது. இந்த சத்தம் கேட்டு திரண்டு வந்த கிராம மக்கள் கரடியை விரட்டியடித்தனர். மேலும் கிராமத்திற்குள் வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர். மேலும் கரடி சுற்றி திரியும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
இதனால் குன்னூர் வனசரகர் சிவகுமார் தலைமையிலான வனத்துறையினர் நேற்று பேரட்டி பகுதியில் இரவு முழுவதும் தீமூட்டி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கரடி நடமாட்டத்தை கண்காணித்து அதற்கு ஏற்ப கூண்டு வைக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர். இதனால் அந்த பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.