தமிழக செய்திகள்

மின்கம்பி அறுந்து விழுந்ததால், மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி - வயலில் உரம் தெளித்தபோது பரிதாபம்

திருச்சி அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியாகினர். வயலில் உரம் தெளித்தபோது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.

தினத்தந்தி

திருச்சி,

திருச்சி-திண்டுக்கல் சாலையில் சத்திரப்பட்டி கீழத்தெருவை சேர்ந்தவர் கருத்தமணி என்கிற ஆறுமுகம். இவருடைய மனைவி ஒப்பாயி (வயது 75). இவர்களுக்கு 4 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ராமமூர்த்தி (50). விவசாயி. இவர்களுக்கு சொந்தமாக திருச்சி நவலூர்குட்டப்பட்டு பகுதியில் 10 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் நெல் பயிரிட்டு இருந்தனர்.

நேற்று பகல் 2.30 மணி அளவில் ராமமூர்த்தியின் மகன் குணசேகரன்(23) வயலில் உரம் தெளித்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென வயல்வெளிக்கு மேலே இருந்த மின்கம்பி அறுந்து விழுந்தது. வயலில் தண்ணீர் தேங்கி இருந்ததால் குணசேகரன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் துடிதுடித்தார். இதை கண்டு வரப்பில் நின்றிருந்த ராமமூர்த்தி அதிர்ச்சி அடைந்தார்.

மகனை காப்பாற்றுவதற்காக அவரும் வயலில் இறங்கி ஓடி வந்தார். இதில் அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. மகனும், பேரனும் வயலில் மின்சாரம் பாய்ந்து துடிப்பதை கண்ட ஒப்பாயியும் வயலில் இறங்கினார். அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அங்கு விரைந்து வந்தனர். வயலில் மின்கம்பி கிடப்பதை கண்டு யாரும் வயலுக்குள் இறங்கவில்லை. உடனடியாக அந்த பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின்னர் பொதுமக்கள் வயலில் இறங்கி மின் கம்பியை அப்புறப்படுத்தினர்.

தகவல் அறிந்த ராம்ஜிநகர் போலீசார் அங்கு சென்று 3 உடல்களையும் கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

வயலில் மின்கம்பி அறுந்து விழுந்ததில் 3 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும்சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சி இ.பி.ரோட்டை சேர்ந்த சீனிவாசனும், அவரது மகன் செந்தில்குமாரும் நேற்று முன்தினம் மின் எந்திர உதவியுடன் மர வேலையில் ஈடுபட்டபோது திடீரென மின்சாரம் பாய்ந்து 2 பேரும் இறந்தனர்.

இ்ந்த சோகம் அடங்குவதற்குள் நேற்று நவலூர்குட்டப்பட்டு பகுதியில் 3 பேர் பலியாகி உள்ளது அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு