தமிழக செய்திகள்

ரூ.16 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள், சரக்கு வாகனம் பறிமுதல்: வாலிபர் கைது

தூத்துக்குடியில் சிறுபாடு பகுதியில் புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிறுபாடு பகுதியில் நேற்று புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படி வந்த சரக்கு வாகனத்தை போலீசார் சோதனை செய்தனர். அதில் தூத்துக்குடியைச் சேர்ந்த சஞ்சய்குமார் (வயது 26) என்பவர், சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட பீடி இலைகளை அந்த சரக்கு வாகனத்தில் கடத்தி வந்தது தெரியவந்தது.

உடனே போலீசார் சஞ்சய்குமாரை கைது செய்து, அவரிடமிருந்த ரூ.16 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட 52 பீடி இலை பண்டல்கள் மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்சொன்ன ரோந்து பணியின்போது துரிதமாக செயல்பட்டு சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட பீடி இலைகளை பறிமுதல் செய்தும், குற்றவாளியை கைது செய்தும் சிறப்பாக செயல்பட்ட புதுக்கோட்டை காவல் நிலைய போலீசாரை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.