கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்!

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,400 கிலோ பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் உட்கோட்டத்திற்குட்பட்ட குளத்தூர் அருகே, இலங்கைக்குக் கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,400 கிலோ பீடி இலைகளை க்யூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

கல்லூரணி பகுதியில் இருந்து கடல் வழியாக பீடி இலைகள் கடத்தப்படவுள்ளதாக க்யூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர், தலைமை காவலர்கள் இருதயராஜகுமார், இசக்கிமுத்து மற்றும் காவலர்கள் பழனி, பாலமுருகன், பேச்சிராஜா ஆகியோர் அடங்கிய குழுவினர் இன்று அதிகாலை கல்லூரணி கடற்கரை சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கல்லூரணி கடற்கரைக்கு செல்லும் வழியில் மறைவான இடத்தில் ஏராளமான மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. சோதனையில், ஒவ்வொன்றும் சுமார் 35 கிலோ எடையுடைய 40 மூட்டை பீடி இலைகள் இருப்பது தெரியவந்தது.

இலங்கைக்குப் படகு மூலம் கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்த 1,400 கிலோ பீடி இலைகளை போலீசார் உடனடியாக பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் என கூறப்படுகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட மூட்டைகள் மேல்நடவடிக்கைக்காக சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. இதுகுறித்து பீடி இலைகளை பதுக்கி வைத்திருந்த கடத்தல்காரர்கள் யார் என்பது குறித்து க்யூ பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.