நாமக்கல்,
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியை சேர்ந்த தீபக் ராஜாவும் அதே பகுதியை சேர்ந்த ரூபாஸ்ரீயும் கடந்த 2025-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்திற்கு ரூபாஸ்ரீயின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், தீபக் ராஜா தனது காதல் மனைவியுடன் சென்னைக்கு குடிபெயர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.
ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக ரூபாஸ்ரீ பெற்றோருடன் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பிலிப்பாகுட்டை பகுதியில் வசித்து வந்த நிலையில் கடந்த மார்ச் 16-ந்தேதி அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை தீபக் ராஜா பார்க்க சென்றபோது, ரூபாஸ்ரீயின் பெற்றோருக்கும் தீபக் ராஜாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் பின்னர் தீபக் ராஜா கடந்த ஏப்ரல் மாதம் தனது மனைவி மற்றும் குழந்தையை அழைத்து வர சென்றுள்ளார். அப்போது குழந்தை உயிரிழந்துவிட்டதாகவும், அதனை புதைத்து விட்டதாகவும் ரூபாஸ்ரீயின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த தீபக் ராஜா, தனது மனைவியின் குடும்பத்தினர் மீது ஆயில்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில், குழந்தை புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட இடத்தில் கடந்த 6-ந்தேதி போலீசார் தோண்டி பார்த்தனர். ஆனால் அங்கு உடலோ, எலும்புகளோ கிடைக்கவில்லை. இதனால் குழந்தையை வேறு யாருக்காவது விற்றுவிட்டார்களா அல்லது வேறு காரணத்தால் குழந்தை இறந்ததா என சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து ராசிபுரம் டி.எஸ்.பி. விஜயகுமார் மேற்பார்வையில் ரூபாஸ்ரீ மற்றும் அவரது பெற்றோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.