சென்னை,
கோட்டூர்புரம் குடியிருப்புகளில் பயனாளிகளுக்கான வீடுகளை விரைந்து ஒதுக்கீடு செய்வதை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியமும், தமிழக அரசும் உறுதி செய்ய வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
”சென்னை கோட்டூர்புரத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகளை ஒப்படைக்கக் கோரி போராடிய பயனாளிகள் மீது காவல்துறையை ஏவி கைது செய்திருக்கும் தவெக அரசின் அடக்குமுறை கடும் கண்டனத்திற்குரியது.
தங்களின் உரிமைகளுக்காக போராடும் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய துறை சார்ந்த அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினரும் வராமல் காவல்துறையை பயன்படுத்தி அவர்களை ஒடுக்க நினைப்பது சர்வாதிகாரப் போக்கே தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?
எனவே, பயனாளிகளுக்கான வீடுகள் விரைந்து ஒதுக்கீடு செய்யப்படுவதை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியமும், தவெக அரசும் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.